மருத்துவர் சிவசங்கரின் மனைவியை ஜனாதிபதியிடம் செல்லவிடாது தடுத்த பாதுகாப்பு பிரிவினர்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவசங்கரை விடுதலை செய்யுமாறுகோரி, ஜனாதிபதியிடம் கடிதத்தினைக் கையளிக்கச் சென்ற அவரின் மனைவியை பாதுகாப்புப் பிரிவினர் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 12ம், 13ம் திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் அவர்களின் பெற்றோர் விடுத்த வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மறுநாள் 13ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய மாடிக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்திருந்தார். இந்நிகழ்வில் வைத்து ஜனாதிபதியிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் சிவசங்கரை விடுவிக்கக் கோரி மனுவொன்றைக் கையளிப்பதற்கு அவரது மனைவியான மருத்துவர் திருமகள் முயற்சித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியிடம் எந்தவொரு மனுவும் நீங்கள் கையளிக்க முடியாது. நாங்கள் அதனைக் கையளிக்கின்றோம் எனத் தெரிவித்து குறித்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் வழங்குவதற்கு அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவர் சிவசங்கர் மாங்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment